நாகையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் வாயில் துணி கட்டி நூதனப் போராட்டம்

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் கோரத் தாண்டவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட விவசாயிகள், தமிழக அரசின் ‘டிஜிட்டல்’ பயிர் கணக்கெடுப்பு முறையை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் அழுகிய நெற்பயிர்களை ஏந்தியும், தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக வாயில் துணியைக் கட்டிக்கொண்டும் அவர்கள் மேற்கொண்ட இந்த நூதனப் போராட்டம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் முழுவதும் பெய்த அதி கனமழையினால், சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி இளம் நெற்பயிர்கள் பல நாட்களாக வெள்ள நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, விளைநிலங்களிலிருந்து வெளியேற வேண்டிய மழைநீர், வடிகால் வாய்க்கால்கள் வழியாகத் திரும்பவும் வயல்களுக்கே புகுந்ததால் பயிர்கள் முழுமையாக அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், பயிர் பாதிப்புகளைக் கணக்கிடத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘டிஜிட்டல் கிராப் சர்வே’ (Digital Crop Survey) எனும் நவீன முறை தங்களுக்குப் பாதகமாக அமையும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து இந்த முறையை உடனடியாக ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், “டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்த வரும் அனுபவமில்லாத வேளாண் அலுவலர்கள், உட்பகுதிகளில் உள்ள வயல்களுக்குச் செல்லாமல், சாலையோரம் உள்ள நிலங்களை மட்டுமே கணக்கில் கொள்கின்றனர். இதனால் உண்மையான பாதிப்புக்குள்ளான பல விவசாயிகளின் நிலங்கள் விடுபட்டுப் போகும் அபாயம் உள்ளது. மேலும், இணையதளக் கோளாறுகள் மற்றும் ஜி.பி.எஸ் (GPS) துல்லியமற்ற தன்மையால் இழப்பீடு பெறுவதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, பழைய நடைமுறைப்படி கிராம நிர்வாக அலுவலரின் (VAO) அடங்கல் பதிவேட்டின் அடிப்படையில், வருவாய்த் துறையினரும் வேளாண் துறையினரும் இணைந்து நேரடி ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினர்.

ஏற்கனவே கடன் வாங்கிச் சாகுபடி செய்த பயிர்கள் அழுகிப் போனதால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் தங்களை, இத்தகைய புதிய தொழில்நுட்ப முறைகளால் மேலும் அலைக்கழிக்க வேண்டாம் என விவசாயிகள் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், காவல்துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் இந்தக் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் உரியப் பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதே டெல்டா விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version