கண்ணங்குடி வட்டாரத்தில் நெற்பயிர்களைச் சூறையாடும் பல்வகை நோய்கள் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கண்ணீர்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள், அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இப்பகுதியில் உள்ள கப்பலூர், சடையமங்கலம், பருத்திக்குடி, மீனாப்பூர், கேசனி மற்றும் குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆர்வத்துடன் ‘ஆர்.என்.ஆர். டீலக்ஸ் பொன்னி’ (RNR Deluxe Ponni) ரக நெல்லைப் பயிரிட்டனர். சாகுபடியின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்த விவசாயிகளுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதல் பேரிடியாக அமைந்துள்ளது.

சாகுபடி தொடக்கத்தில், அரசு விதை மையங்களில் விநியோகிக்கப்பட்ட விதைகள் சில கிராமங்களில் முளைக்காதது விவசாயிகளுக்கு முதல் பின்னடைவாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நிலவிய கடும் வறட்சி மற்றும் வெயில் தாக்கத்தால் முளைத்த பயிர்களும் கருகத் தொடங்கின. இந்த இக்கட்டான சூழலில், புயல் காரணமாகப் பெய்த மழை விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது. மழையைத் தொடர்ந்து பயிர்கள் செழித்து வளர்ந்து, கதிர் பிடித்து, இன்னும் இரண்டு வாரங்களில் அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கையைத் தந்தன. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

தற்போது எதிர்பாராத விதமாக நெற்பயிர்களில் செந்தாழை, குலை நோய், புகையான், வெள்ளைப் பூச்சித் தாக்குதல் மற்றும் தோகை எரிந்து சாம்பலாகும் நோய், பழுப்பு நோய் எனப் பல்வேறு நோய்கள் வரிசையாகத் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் திரட்சியாக இருக்க வேண்டிய நெல் மணிகள் பதராகி வருகின்றன. இது குறித்துக் கவலையுடன் பேசிய கண்ணங்குடி விவசாயி பாக்கியராஜ், “ஆரம்பத்தில் மழை தாமதம் மற்றும் விதை முளைக்காதது எனப் பல சிரமங்களைக் கடந்துதான் பயிரை வளர்த்தோம். ஆனால், கதிர் முற்றிப் பலன் தரும் நேரத்தில் இப்படி நோய்கள் தாக்கிவிட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,” என வேதனை தெரிவித்தார்.

பல்வேறு நோய்கள் ஒரே நேரத்தில் தாக்கி வருவதால், மகசூல் பாதியாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்குப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, தற்போது கடனைத் திருப்ப முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே, வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நேரடி ஆய்வு நடத்தி, நோய் மேலாண்மைக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரியப் பயிர் காப்பீடு மற்றும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணங்குடி வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version