கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல மாடல் : ஹரியானாவில் பரபரப்பு !

பானிபட் :
பிரபல மாடலாகும் சிம்மி சவுத்ரி என்கிற ஷீத்தல், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்கவுடா பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரி காணாமல் போனதாக புகார் :

ஜூன் 14-ஆம் தேதி, ஷீத்தலின் சகோதரி நேஹா, தனது சகோதரி காணாமல் போனதாக பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். “சுனில் என்கிற முன்னாள் காதலர் அவரை தாக்கி, தொடர்ந்து தொந்தரவு அளித்து வருகிறார்” என்று ஷீத்தல் அந்த நாள் இரவு 1.30 மணிக்கு தனது சகோதரிக்கு தெரிவித்திருந்ததும், அதற்குப் பிறகு அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் நேஹா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

கொலையில் காதலன் சிக்கினார் :

இந்நிலையில், ஜூன் 16-ஆம் தேதி கார்கவுடா கால்வாயில் இருந்து ஷீத்தலின் சடலம் மீட்கப்பட்டது. ஹரியானா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலையில் முக்கிய சந்தேக நபராக ஷீத்தலின் முன்னாள் காதலனும், ஓட்டல் உரிமையாளருமான சுனில் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் தனது காருடன் விபத்தில் சிக்கியதாகவும், ஷீத்தல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் சுனில் விளக்கம் அளித்தார்.

விசாரணையில் நிஜம் வெளிவந்தது :

ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில், ஷீத்தலைத் தானே கொலை செய்ததாக சுனில் ஒப்புக்கொண்டார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மது அருந்திய நிலையில் கோபத்தில் இந்த கொலை நடந்திருக்கும் வாய்ப்பு குறித்து போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சுனிலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையின் தெளிவான காரணம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பின்னணி விபரங்கள் :

கர்னாலில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்த ஷீத்தல், பின்னர் ஹரியானா இசைத் துறையில் மாடலிங் செய்து புகழ் பெற்றார். அவரது முன்னாள் காதலன் சுனிலுடன் காதல் மலர்ந்தது, பின்னர் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் ஷீத்தல் அறிந்து பிணைவை முறித்துகொண்டதாக தெரிகிறது.

இச்சம்பவம் மாடலிங் உலகத்தையும், ஹரியானா மக்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version