வாஷிங்டன் : அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இன்று இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் அடையாளம் தெரியாத பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த யாரோன் மற்றும் சாரா எனும் இளம் ஜோடி, அடுத்த வாரம் ஜெருசலேமில் நிச்சயதார்த்தம் செய்ய இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் அமெரிக்க தூதர் யெச்சியல் லெய்டர் கூறியதாவது:
“இவர்கள் இருவரும் தூதரகத்தின் முக்கிய ஊழியர்கள். அவர்களது நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு, அனைவரும் உற்சாகமாக இருந்த நேரத்தில், இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்தது.”
இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,
“இவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. ஆனால் வாஷிங்டனில் ஒரு பயங்கரவாதியின் துப்பாக்கிச் சூட்டால் அவர்களின் வாழ்க்கை நிறைவடைந்தது. இழப்பால் தூதரக ஊழியர்கள் அனைவரும் பேரதிர்ச்சியில் உள்ளனர். இந்த துயரத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் எங்கள் இதயங்கள் இணைந்துள்ளன,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில், அவரது மீது இதற்கு முன் எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் இல்லை என தெரியவந்துள்ளது. தற்போது, இந்த கொலைக்கான பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.