உசிலம்பட்டியில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து பிரம்மாண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே வத்தலக்குண்டு – பேரையூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டமாக மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது. உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு கருதி உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுப் பொதுமக்களின் வசதிக்காக அகலமான நடைபாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் அந்த நடைபாதைகளையும் ஆக்கிரமித்துச் சில வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் படிகள், தடுப்புச் சுவர்கள் மற்றும் கடைகளின் விரிவாக்கக் கட்டமைப்புகளை மீண்டும் சட்டவிரோதமாகக் கட்டியிருந்தனர். இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோடு, உசிலம்பட்டி நகருக்குள் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை நீடித்தது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் புகார்களை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

நேற்று நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் படிகள், இரும்புத் தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுத்தனர். உசிலம்பட்டி நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பற்ற மண்டலங்களாக மாற்றப்படும் என்றும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டப்படி வழக்குத் தொடரப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால் உசிலம்பட்டி நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தற்போது விசாலமாகக் காட்சியளிப்பதுடன், வாகனப் போக்குவரத்து எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெற்று வருகிறது.

Exit mobile version