அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்காக, உலகின் முன்னணி பணக்காரரும் தொழில்நுட்ப வல்லுநருமான எலான் மஸ்க் முழுமையாக ஆதரவளித்தார். நிதி உதவி, சமூக ஊடகப் பிரசாரம் என பலவகையில் அவருக்காக செயல்பட்ட மஸ்க், பின்னாளில் டிரம்ப் நிர்வாகத்தில் DOGE துறையின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பல நிதி உதவித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அமெரிக்காவில் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்ப, டிரம்பும் மஸ்கும் கடுமையான விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
இந்த சூழலில், ‘Big Beautiful Bill’ என்ற மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மஸ்க் மறைமுகமாக அதனை விமர்சித்ததோடு, டிரம்பின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உச்சத்தைக் கண்டது.
மஸ்க் மீது வெறுப்பை வெளிப்படுத்திய டிரம்ப், SpaceX உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு ஒப்பந்தங்களையும் மானியங்களையும் ரத்து செய்வதாக மிரட்டினார். இதற்கு பதிலாக, மஸ்க், குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் டிரம்பின் பெயர் உள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
பின்னர், இந்த கருத்துகள் குறித்து வருத்தம் தெரிவித்த மஸ்க், டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார். இதனைப் பொறுத்த அதிபர் டிரம்ப், “அவர் மன்னிப்பு கேட்டது ஒரு நல்ல விஷயம்” எனத் தெரிவித்தார். தற்போது இருவரும் தங்கள் முரண்பாடுகளை மறந்து மீண்டும் ஒன்றிணைவார்கள் எனத் தெரிகிறது