மூணாறு: கேரள மாநிலம் மூணாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளில் ஒன்றான ‘படையப்பா’ யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நின்று போக்குவரத்தைத் தடை செய்வது, கடைகளைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களால் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். சமீபகாலமாக, படையப்பா யானை மனித குடியிருப்புகளுக்கு அருகில் வந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானையின் அட்டகாசம் எல்லை மீறியுள்ளது:
மாட்டுப்பட்டி படகு சவாரி மையம் அருகே சாலையோரம் இருந்த இரண்டு கடைகளை உடைத்து நாசம் செய்தது. கடைகளில் இருந்த பழங்கள் மற்றும் மக்காச்சோளத்தைத் தின்று தீர்த்தது. அருகில் உள்ள நெற்றிமேடு எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை, அங்குள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ், முட்டைக்கோஸ், பட்டர் பீன்ஸ் போன்றவற்றைச் சேதப்படுத்தியது. லாக்காடு எஸ்டேட்டில் நுழைந்தபோது, நான்கு சாலையோரக் கடைகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.
படையப்பா யானை தற்போது மாட்டுப்பட்டி எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிவதால், இப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். முன்பு இந்த யானை அமைதியான சுபாவத்துடன் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவ்வப்போது ஆக்ரோஷத் தன்மையைக் காட்டுவது, எஸ்டேட் தொழிலாளர் குடும்பங்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. யானையின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தவும், குடியிருப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
