கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி நகர 6, 7, 8 மற்றும் 9 ஆகிய வார்டுகளில் அதிமுகவின் தேர்தல் களப்பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், பூத் வாரியான கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. பொள்ளாச்சி நகரச் செயலாளர் வி. கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்குத் தேர்தல் கால வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார். தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்திக்கும் வகையில் அதிமுக தனது கிளை மட்டத்திலான கட்டமைப்பை இப்போதே வலுப்படுத்தி வருகிறது.
கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள பூத் வாரியாக வாக்காளர் பட்டியலை மிகத் துல்லியமாகச் சரிபார்க்க வேண்டும். நடைபெறவுள்ள வாக்காளர் சிறப்பு முகாம்களில் நிர்வாகிகள் விழிப்புடன் இருந்து, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, விடுபட்டவர்களைச் சரியான சான்றிதழ்கள் மூலம் மீண்டும் பட்டியலில் இணைப்பது போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார். மேலும், 2026-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய, அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சிக்குக் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களையும், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் பொதுமக்கள் சந்தித்து வரும் பல்வேறு இன்னல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பேரவைச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஜேம்ஸ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அதிமுகவின் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளான பாரதிய ஜனதா கட்சியின் பரமகுரு, கோகுல் குமார், வாசு மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மாவட்டப் பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்பு குரு, நகரப் பொருளாளர் கனகு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, காளிமுத்து, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்பாளர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.
மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் வசந்த், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர்கள் சுரபி ரமேஷ், வார்டு நிர்வாகிகள் சின்னு, மயில்சாமி, மாணிக்கம், சுந்தரம், நடராஜ், ஆடிட்டர் கணேஷ், சரோஜினி, நகரப் பேரவைச் செயலாளர் மார்ட்டீன், நகர அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ஆட்டோ ரவி, நகர மாணவரணிச் செயலாளர் தினேஷ் பாபு, நகர மகளிர் அணிச் செயலாளர் சபியா உள்ளிட்ட நகர மற்றும் பூத் கிளை நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், வரவிருக்கும் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யவும், எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தவும் நிர்வாகிகள் அனைவரும் உறுதி பூண்டனர்.
