மயிலாடுதுறையில் 35வது வார்டில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 35 வது வார்டு புது வெள்ளாளன் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி , மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் , மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வீடுகளில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அடிக்கடி பாம்பு தேள் பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இப்பகுதியில் உலவி வருவதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் வாழுகின்றனர்.
மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆக்கிரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிக்கப் போவதாக ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளனர். மேலும் தங்கள் பகுதிக்கு யாரும் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
