“அரோகரா முழக்கத்துடன் சொந்த ஊரில் எடப்பாடியார்”: பழனியாண்டவர் கோயிலில் தரிசனம்

உலகெங்கும் வாழும் தமிழர்களால் தைப்பூசத் திருநாள் இன்று பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள பழனியாண்டவர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாநிலத்தின் அனைத்து முருகன் கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சிலுவம்பாளையம் பழனியாண்டவர் கோயிலில் முருகப்பெருமானுக்கு இன்று விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகக் காவிரி கரையிலிருந்து திரளான பக்தர்கள் காவடி ஏந்தி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டுச் சிலுவம்பாளையம் கோயிலைச் சென்றடைந்தனர்.

தொடர்ந்து, பழனியாண்டவருக்குப் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டபோது, அங்குக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’, ‘பழனியாண்டவருக்கு அரோகரா’ எனப் பக்தி முழக்கமிட்டுப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாகப் பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கும் முருகனுக்கும் படையலிட்டுத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த ஆன்மீக நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமியை வணங்கினார். அவருடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளும், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

வழிபாடுகள் நிறைவடைந்த பிறகு, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமி எவ்வித ஆடம்பரமும் இன்றி மக்களோடு மக்களாகத் தரையில் அமர்ந்து, மிக எளிமையான முறையில் அன்னதானம் உண்டு மகிழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் உற்சாகமாக உரையாடியதோடு, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், தனது சொந்த ஊரில் உள்ளூர் மக்களுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தைப்பூச விழாவைக் கொண்டாடியது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version