எடப்பாடியின் ஈரோடு சூறாவளிப் பிரச்சாரம்: அலை கடலெனத்திரண்டு வரகே .சி.கருப்பணன் அழைப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று உரையாற்ற உள்ளார். “மக்களைக் காண்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் மேற்கொண்டு வரும் இந்தச் சூறாவளிப் பிரச்சாரப் பயணத்திற்கு, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெருந்துறையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய கே.சி.கருப்பணன், திமுக ஆட்சியில் மின்கட்டணம் மற்றும் வீட்டு வரி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை ஏற்படுத்தி, எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்த மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுகவின் 2026 தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் ‘குலவிளக்குத் திட்டம்’, 100 நாள் வேலை வாய்ப்பைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், பெண்களுக்கு ரூ.25,000 அம்மா இருசக்கர வாகன மானியம் மற்றும் முதியோர் உதவித்தொகை ரூ.2,000-ஆக உயர்வு போன்ற முக்கியத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று மக்களிடம் விளக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் ஈரோடு மாவட்டப் பயணத் திட்டத்தின்படி, மார்ச் 7-ஆம் தேதி அந்தியூரிலும், மார்ச் 8-ஆம் தேதி பெருந்துறை (மாலை 4 மணி) மற்றும் பவானி (மாலை 5.30 மணி) ஆகிய இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. குறிப்பாக, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காகப் பெருந்துறை மக்கள் சார்பில் அவருக்குப் பிரம்மாண்ட நன்றியறிவிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் என்பதால், மகளிர் அணி சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கூட்டத்திற்கு வரும் சுமார் 30 ஆயிரம் பேருக்கும் தேவையான குடிநீர், கழிப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version