உலகப் புகழ்பெற்ற ‘மதுரை மல்லிகை’ சாகுபடியில் முக்கிய மையமாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளில், நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூவின் விலை முதல்முறையாக கிலோ 10,000 ரூபாய் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளது. ஐ.எஸ்.ஓ (ISO) தரச்சான்று பெற்ற உயர்தர மல்லிகை விளையும் இந்தப் பகுதிகளில், உற்பத்தி சரிபாதியாகக் குறைந்ததே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து சேகரிக்கப்படும் பூக்கள் வாசனை திரவிய ஆலைகளுக்கும், சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நிலக்கோட்டை மலர் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாகச் செழிப்பாகக் காணப்படும் இந்தப் பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக அதிகாலை வேளையில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மல்லிகைச் செடிகளைப் பதம் பார்த்துள்ளது.
கடும் குளிரின் காரணமாக மல்லிகைச் செடிகளில் மொட்டுகள் அரும்பு விடாமல் கருகி வருகின்றன. இதனால், நாளொன்றுக்கு டன் கணக்கில் வந்து கொண்டிருந்த பூக்களின் வரத்து தற்போது கிலோ கணக்கில் சுருங்கியுள்ளது. சந்தைக்கு வரும் பூக்களின் அளவு மிகக் குறைவாகவும், தேவை மிக அதிகமாகவும் இருப்பதால், நிலக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தர மல்லிகை ஒரு கிலோ 10,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.
சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் கூறுகையில், “மஞ்சள் மற்றும் பனிப்பொழிவு மல்லிகை விவசாயத்தைப் பெருமளவில் பாதித்துள்ளது. செடிகளில் மொட்டுகள் உருவாவதே தடைபட்டுள்ளதால், அறுவடை செய்யப் பூக்கள் இல்லை. வரத்து குறைந்ததால் விலை உயர்ந்திருந்தாலும், எங்களிடம் விற்பனை செய்யப் பூக்கள் இல்லாததால் இந்த விலை உயர்வினால் விவசாயிகளுக்குப் பெரிய பலன் கிடைக்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர். பனிப்பொழிவு குறைந்து சீதோஷ்ண நிலை மாறினால் மட்டுமே மல்லிகை உற்பத்தி சீராகும் என்பதால், பிப்ரவரி மாதம் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக மலர் வணிகர்கள் கணித்துள்ளனர்.

















