தனது மகனின் முதல் படமான ‘ஃபீனிக்ஸ்’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு, நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுடனான சுவாரஸ்ய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்த ஃபீனிக்ஸ் திரைப்படம், கடந்த ஜூலை மாதம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் நவம்பர் 7ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது.
ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசிய விஜய் சேதுபதி,
“நான் ஜவான் படத்தில் நடிக்கும்போது தான் இயக்குனர் அனல் அரசை சந்தித்தேன். அவர், ‘உங்கள் மகன் இந்த கதைக்கு பொருத்தம்’ என்று கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் பேசி படத்தை எடுத்தார்கள். நான் பார்த்தபோது, உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன். இது என் மகனுக்கு நல்ல தொடக்கம்,” என்றார்.
தனது மகனின் சினிமா ஆர்வத்தை நினைவுகூர்ந்த விஜய் சேதுபதி மேலும் கூறியதாவது:
“சிறுவயதிலிருந்தே சூர்யாவுக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். 16 வயதில், ‘அப்பா, நீங்க சாதாரண படம் நடிக்காதீங்க, ஆக்ஷன் படம் மட்டும் நடிங்க’ என்று அடிக்கடி சொல்லுவான். வழக்கமாக அப்பாக்கள் தான் மகனுக்கு ஆலோசனை சொல்வார்கள், ஆனா அவன் தான் எனக்கு சொல்வான்! கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது தான் ‘நான் நடிகனாகணும்’ என்றான். அதற்கு தயாராகணும் என்றேன். அதன்பிறகு வாய்ப்பு வந்தது. அதற்கு காரணம் அனல் அரசு மாஸ்டர் மற்றும் ராஜலட்சுமி மேடம்,” என்று கூறினார்.
அதேபோல் நடிகை வரலட்சுமியைப் பற்றி பேசும்போது, “நான் அவருடன் விக்ரம் வேதா, மைக்கேல் படங்களில் நடித்திருக்கிறேன். அவரின் எனர்ஜி எப்போதும் குறையாது. சீக்கிரம் அவர் பெயரில் ஒரு எனர்ஜி டிரிங்க் கம்பெனி துவங்கலாம்,” என நகைச்சுவையாகச் சொன்னார்.
தற்போது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, “இன்னும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துவிட்டால் நன்றாக பேசிவிடுவேன். பிறகு தெலுங்கில் எழுதவும் முயற்சி செய்வேன். எந்த மொழியாக இருந்தாலும் படம் நல்லதாக இருந்தால் மக்கள் அதை கொண்டாடுவார்கள். அதேபோல ஃபீனிக்ஸ் படத்துக்கும் அதே வெற்றி கிடைக்கும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

















