திமுகவின் ‘பி டீம்’… செங்கோட்டையனை நீக்கியது ஏன்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம் !

சேலம்: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கடந்த ஆறு மாதங்களாக செங்கோட்டையன் அதிமுகக்கு எதிராகவே செயல்பட்டு வந்தார். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக நடைபெற்ற பாராட்டு விழா அதிமுக சார்பாக நடத்தப்படவில்லை. அந்த நிகழ்வில் ஜெயலலிதா அம்மா படம் இடம்பெறவில்லை என்று தவறாக கூறினார். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதைத் தெளிவுபடுத்திய பின்னரும் அவர் ஏற்கவில்லை,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது : “மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதனால்தான் நாங்கள் அவரை ‘திமுகவின் பி டீம்’ என்கிறோம்.

சட்டசபையில் திமுகவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசவில்லை. அதேசமயம், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அல்ல. அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். அந்த நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் இணைந்துள்ளார்.”

மேலும், “கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் உடன் தொடர்பு வைக்கக் கூடாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக செயல்பட்டால் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பது அவருக்குத் தெரியும். எனவே, இது நான் எடுத்த தனிப்பட்ட முடிவு அல்ல,” எனவும் விளக்கம் அளித்தார்.

“செங்கோட்டையனை அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவர் என கூறும் செங்கோட்டையன், அப்போது ஏன் நீக்கப்பட்டார்? நான் முதல்வரான பின் அவரை மீண்டும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளராக நியமித்தேன்,” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version