கோவை :
தமிழக அரசின் செயல்திறனை கடுமையாக விமர்சித்த பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தி.மு.க. அரசு அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
கோவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் கூறியதாவது:
“தி.மு.க. போல் அல்லாமல், பா.ஜ. அளித்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் உள்ள மாவட்டமாக கோவை விளங்குகிறது. ஆனால், இங்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் வலியுறுத்தல்.”
மேலும், தேசிய வளர்ச்சி குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்:
“கொரோனா காலத்திலும் கூட, நாங்கள் எடுத்துள்ள இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் சென்றோம். சமீபத்தில், இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. மத்திய அரசு திட்டங்களை, மாநில அரசு முடக்கப் பார்க்கிறது என்பது வருத்தத்துக்குரியது.”
மத்திய அரசின் பங்கு, தேர்தல் வாக்குறுதி விவாதம்
“பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசின் பங்கு இல்லை. தமிழகம் வழங்கும் ஒவ்வொரு ரூபாயுக்கும் மத்திய அரசு நியாயமான முறையில் திருப்பி வழங்கியுள்ளது. தி.மு.க. அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி விவரம்
“நான் பா.ஜ. தொண்டன். உயிருள்ளவரை இந்தக் கட்சிக்கே உழைப்பேன். கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். சில நேரங்களில் எங்கே வாயை மூட வேண்டுமோ, அங்கே வாயை மூடுகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றம் உறுதியாக ஏற்பட வேண்டும்.”
கூட்டணிகளைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“கூட்டணிக்கு எண்ணிக்கையை விட, எண்ணமே முக்கியம். கூட்டணி இரண்டு வகை – பொருந்தும் கூட்டணி, பொருந்தா கூட்டணி. அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணி எதிர்காலத்தில் பொருந்தும் கூட்டணியாக மாறும்,” என்று தெரிவித்தார்.