தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, தொடர் பதற்றமான சூழலே நிலவி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்களும், ஜாதி ரீதியான மோதல்களும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து பகுதியில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, சாலையோர டீக்கடையில் அமர்ந்திருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக அரிவாள் வீச்சில் ஈடுபட்டதில் இரண்டு பேர் துடிதுடிக்கக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சமூக விரோதிகளுக்குப் பயமே இல்லை என்பதைக் காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய வன்கொடுமைகளைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். “திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடூரங்கள் தொடர்கதையாகி வருகின்றன; அடித்தட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறி வேடிக்கை பார்க்கிறது” என்று அவர் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். நாங்குநேரி சம்பவம் போன்ற வன்முறைகள் மீண்டும் நிகழாத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அமைதியைப் போற்றும் தென் மாவட்டங்கள் மீண்டும் வன்முறைக்காடாக மாறுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
