தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை, மே 19 :
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
“தமிழக அரசு தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள முழுமையாக தயாராக உள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாகும். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.”

மேலும், மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

கடலோர மாவட்டங்களில் பருவமழையை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பேரிடர் முகாம்கள் செயல்படத் தயாராக இருக்க வேண்டும். அவ்விடங்களில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

“இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை இயல்பானதாகவே இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்தவொரு அவசர சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்,” என முதல்வர் தெரிவித்தார்.

Exit mobile version