விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா இன்று சிறப்புச் செய்தியாளர் பயணத்தை மேற்கொண்டார். கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை அவர் நேரில் கேட்டறிந்தார்.
முதற்கட்டமாக, குலசேகரநல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மசாலா தயாரிப்புத் தொகுப்பு (Masala Processing Unit) அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த மையத்தை ஆட்சியர் திறந்து வைத்தார். தொடர்ந்து, அங்கு தயாரிக்கப்படும் மசாலாப் பொருட்களின் தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். மேலும், சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாகச் சந்தைக்குக் கொண்டு செல்ல, வட்டி மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தையும், குழு உறுப்பினர்களுக்கான புதிய அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னிலைகுடி ஊராட்சியில் 2023-–2024-ம் ஆண்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை’ ஆட்சியர் பார்வையிட்டார். அங்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 100 புதிய வீடுகளைத் தகுதியான பயனாளிகளுக்கு வெளிப்படையான முறையில் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அமைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில், அடிப்படைத் தேவையான குடிநீர், சாலை மற்றும் மின்சார வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், பயனாளிகளுடன் இணைந்து புதிய வீடுகளின் தரத்தினை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வீ.கேசவதாசன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடைவதை உறுதி செய்வதே இத்தகைய களப்பயணங்களின் நோக்கம் என ஆட்சியர் தெரிவித்தார். ஆட்சியரின் இந்த நேரடி வருகை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்வு திருச்சுழி பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

















