மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு விழிப்புணர்வு பதாகைகளில், ‘சைகை’ மொழி குறியீட்டை பயன்படுத்த வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து, பஸ்சில் அழைத்துச்சென்று ஏற்றியும் இறக்கியும் அலைக்கழித்தனர். அவ்வாறு இறக்கி விடும்போது, மாற்றுத்திறனாளிகளை போலீசார் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதில், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் மனைவி ஜான்சி ராணி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்ப அங்காடி முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு ஒரு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசை கண்டித்தும், கைது என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

















