5ம் தலைமுறை போர் விமானங்கள் உருவாக்கம் : தனியார் பங்களிப்புடன் மத்திய அரசின் ஒப்புதல்

புதுடில்லி : இந்தியா, உள்நாட்டு பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் தனியார் பங்களிப்பும் அனுமதிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறையை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முயற்சியாகவோ ஏலத்தில் பங்கேற்கலாம். இருப்பினும், அவை இந்திய சட்டங்களை பின்பற்றும் இந்திய நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இந்நிலையில், 5ம் தலைமுறை போர் விமானம் 2035ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தெரிவித்துள்ளது.

DRDO தலைவர் சமீர் வி. காமத் கூறுகையில், “இந்த திட்டத்திற்கு 2024ம் ஆண்டு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விமானங்களை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும். 4ம் தலைமுறை ‘காவேரி’ இன்ஜின் வளர்ச்சியில் பெற்ற அனுபவங்கள் வலுவாக இருக்கின்றன. தற்போது எங்கள் பார்வை 6ம் தலைமுறை இன்ஜின் மேல் உள்ளது,” என்றார்.

Exit mobile version