டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்த பின் திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் அணையா விளக்கு ஐயப்பன் பேட்டி..

கனரக லாரிகளுக்கு தகுதி சான்று புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. டீசல் விற்பனையில் ஒரே விலை, டயர்கள் விற்பனையில் ஒரே விலை, லாரிகளுக்கு வாடகைக்கு ஒரே மாதிரியான நடைமுறை. ஆனால் முன்பு 850 ரூபாய் இருந்த புதுப்பிப்பு கட்டணத்தை, தற்போது 28 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள லாரி உரிமையாளர்களை மீட்டெடுக்கும் வகையில், புதிய கட்டணங்களை மாற்றி பழைய கட்டணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருந்து 500க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் ஊர்வலமாக வந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைத்து லாரி உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதாக போலீஸிடம் தெரிவித்த நிலையில், போலீசார் அனைவரும் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஐந்து நபர்கள் மட்டும் சென்று மனு அளிக்குமாறு போலிசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் , லாரி உரிமையாளர்களின் கோரிக்கை மனுவை கொள்வதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே வந்து 15 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தார். ஆனால் லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே 15 நிமிடங்கள் காத்திருந்த மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பின்னர் அனைவரும் வர சொல்லுங்கள் எனக் கூறி மனுவை பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருவாரூர் மாவட்டம் லாரி உரிமையாளர் சங்க தலைவர் அணையா விளக்கு ஐயப்பன் கூறும்போது…

ஒன்றிய அரசு லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய வகையில் தகுதி சான்று கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது. கேரளா அரசாங்கம் கர்நாடக அரசாங்கமும் குறைத்தது போல் தமிழக அரசும் குறைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள லாரிகள் அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை மட்டுமே நம்பி இயங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். வரும் 15ஆம் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி தீர்வு கிடைக்காத பட்சத்தில் டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். தற்போது விவசாய அறுவடை காலகட்டமாக இருப்பதால் நெல்மணிகள் தேக்கமடைய வாய்ப்புள்ளது. லாரி உரிமையாளரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறும் பட்சத்தில் வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். அப்படி வேலை நிறுத்தம் செய்யும்போது அறுவடை காலம் என்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்படும். நெல் மூட்டைகள் தேக்கமடையும். எங்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே இந்த போராட்டம். மற்றபடி யாரையும் பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை. தமிழக முதலமைச்சர் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றார்

வழக்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருபவர்கள், காத்திருந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியரையே 15 நிமிடங்களுக்கு மேல் காக்க வைத்த லாரி உரிமையாளரின் செயல் அங்கிருந்தவர்களை முகச்சுழிப்பை உண்டாக்கியது.

Exit mobile version