திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி : பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்!

மதுரை :
மதுரை உயர் நீதிமன்ற அமர்வின் வரம்பிற்குள்ளான 14 மாவட்டங்களில் கோயில் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாக்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி கோரி, 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்களின் தரப்பில், “பல்வேறு ஆண்டுகளாக திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்படுவது நியாயமல்ல. எனவே, இவ்வாண்டும் அனுமதி வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி,

“இது சமூக ஊடகங்களின் காலம். இந்நிலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரப்படுகிறது. ஆனால், இவை நடத்த அதிக பணம் செலவாகிறது. எனவே, சமூக நலனுக்காக ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது” எனக் கூறினார்.

நிபந்தனை என்ன?
நீதிபதி தொடர்ந்து,

“மனுதாரர்கள், நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்பின் செயலரிடம் ரூ.25,000 செலுத்த வேண்டும். அந்த தொகை அந்தந்த கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வார பயன்படுத்தப்பட வேண்டும். இது கிராம வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” என்று உத்தரவிட்டார்.

இதன் மூலம், திருவிழாவில் கலை நிகழ்ச்சி அனுமதி வழங்கப்பட்டதுடன், சமூக பயன்பாட்டுக்கும் ஒரு வழி உருவாகியுள்ளது.

Exit mobile version