“வாழ்க்கைத் தரம் உயர்த்தும் கான்கிரீட் வீடுகள்”: கூடலூரில் கலெக்டர் பவன்குமார் அடிக்கல் நாட்டினார்!

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு செல்வபுரம் வடக்கு பகுதியில் வசிக்கும் பழங்குடியின (நரிக்குறவர்) மக்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கும் விதமாக, ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் 54 புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்வர் இன்று அடிக்கல் நாட்டினார். தமிழக முதலமைச்சரின் நேரடி கவனத்தின் கீழ், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உன்னதத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த வாகே, உதவி ஆட்சியர் (பயிற்சி) மருத்துவர் பிரசாந்த், கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு, நகராட்சி ஆணையர் பூவேந்திரன் மற்றும் நகர்மன்றத் துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், “கடந்த 2022-ம் ஆண்டு வரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர் இன மக்கள், தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இவர்களுக்கு 2022-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்ட நிலையில், அங்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சி.எஸ்.ஆர் (CSR) நிதியிலிருந்து ஒவ்வொரு வீடும் தலா 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. கோவை மாவட்டத்திலேயே முதல்முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் வீடுகள் கட்டித்தரப்படுவது இதுவே முதன்முறை” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த வீட்டுவசதித் திட்டத்தோடு மட்டுமல்லாமல், கூடலூர் நகராட்சி வார்டு எண் 1-ல் செல்வபுரம் முதல் பைபிள் காலேஜ் ரோடு வரை 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறுபாலம் அமைக்கும் பணியும் தொடங்கப்படவுள்ளது. மேலும், அப்பகுதியில் அடிப்படை சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளால் செல்வபுரம் பகுதி நவீன வசதிகளைப் பெறவுள்ளது. தங்களுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் 54 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் தங்களது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், வார்டு உறுப்பினர் சாந்தாமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Exit mobile version