ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக, கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண்மைப் பொறியியல் நிறுவனத்தின் (CIAE) உயர்தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் ‘ஐந்திணைவேளாண்மை மேலாண்மை திட்டம்’ குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பழங்குடி உழவர்கள் உழவுப் பணி முதல் அறுவடை வரை அனைத்து வேளாண் செயல்பாடுகளையும் நவீன இயந்திரங்கள் மூலம் மிகக்குறைந்த செலவில் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டத்தின் வீச்சை விளக்கிய கலெக்டர், தமிழகத்தின் சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 14 பழங்குடியினர் கிராமங்களில் ‘வேளாண் கருவி வாடகை மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மையத்திற்கும் தலா ரூ.25 லட்சம் மதிப்பிலான அதிநவீனக் கருவிகள் மற்றும் கருவிகளைப் பராமரிக்க ரூ.25 லட்சம் மதிப்பிலான நிரந்தரக் கூடாரங்கள் (Sheds) அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர், பர்கூர், தாளவாடி பகுதிகளில் செயல்படும் பழங்குடி உழவர்கள் மேம்பாட்டுச் சங்கங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான டிராக்டர், சூழல் கலப்பை, கொத்து கலப்பை, டிப்பிங் டிரெய்லர், தானியக் கதிர் அடிக்கும் இயந்திரம், காபி கொட்டை பதன இயந்திரம், சூரிய ஆற்றல் உலர்த்தி, பேக்கிங் இயந்திரம் மற்றும் நடவு இயந்திரம் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. மேலும், இயந்திரங்களைச் சேமிக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான கொட்டகை அமைக்கவும் ஆணை வழங்கப்பட்டது.

பொருளாதார ரீதியாகப் பழங்குடி மகளிரை மேம்படுத்தும் நோக்கில், பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் பழங்குடி மகளிர் மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், சூரிய ஆற்றலில் இயங்கும் ராகி தரம் பிரித்தல், கசடு நீக்குதல் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரத் தொகுப்புகள் 14 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன. இது மலைப்பகுதி மகளிரின் வேலைப்பளுவைக் குறைப்பதோடு சுயதொழில் வாய்ப்பையும் உருவாக்கும். கல்விப் பணியிலும் அக்கறை காட்டிய மாவட்ட நிர்வாகம், கோபிச்செட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த விளாங்கோம்பை மலைக்கிராம மாணவர்கள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வர ரூ.15.74 லட்சம் மதிப்பிலான சிறப்புப் பள்ளி வாகனத்தையும் வழங்கியது. இதன் மூலம் 26 மாணவர்கள் இனி அடர்ந்த காட்டுப்பகுதிகளில் சிரமமின்றி கல்வி கற்கச் செல்ல முடியும்.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மூத்த விஞ்ஞானி செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மகேஷ்வரி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்களின் விவசாயம், மகளிர் மேம்பாடு மற்றும் கல்வி என முப்பரிமாண வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த நலத்திட்டங்கள், ஈரோடு மாவட்டப் பழங்குடியின மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Exit mobile version