இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, அவசர தூதரக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்
அண்மையில் ராமேஸ்வரத்திலிருந்து சென்ற 5 தமிழ்மீனவர்கள், எல்லை மீறி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, புத்தளம் கடற்பரப்பில் பாம்பன்மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி, உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், வெளிநாட்டு கடற்படையால் மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது கவலைக்கிடமாக இருப்பதாகவும், இம்மாதம் மட்டும் இது நான்காவது கைது சம்பவமாக இருப்பதையும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். தற்போது மொத்தம் 68 தமிழக மீனவர்கள் இலங்கை காவலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.