இந்த ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் மே 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கூட்டத்தில் பங்கேற்காத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லி செல்ல உள்ளார்.
இதைக் கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது சமூக வலைதளப் பதிவில்,
“மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாக கூறி கடந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ஸ்டாலின், தற்போது திடீரென டெல்லிக்கு பறக்கிறார்! மாநில மக்களுக்காக போகாதவர், தன் குடும்பத் தேவைக்காக செல்கிறார். அன்று 2G வழக்குக்காக அப்பா டெல்லி சென்றார்; இப்போது டாஸ்மாக்… தம்பி… வெள்ளைக் குடை… என்ன வேலைவந்ததோ?”
என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கான பதிலடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதில் பதிவில் கடுமையாக பதிலளித்துள்ளார்.
“தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வலியுறுத்துவதற்காகவே டெல்லி செல்கிறேன்! சசிகலா முதல் அமித் ஷா வரை ஆட்கள் மாறினாலும், டேபிள் அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மட்டும் மாறாதவர் பழனிசாமி. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற கையெழுத்து உலரவும் முன்பே, வெள்ளைக் கொடி ஏந்த சென்றவர் பழனிசாமிதான். எனது கை கருப்பு சிவப்பு கொடியை ஏந்தும் கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!”
என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற சட்டப்பூர்வமான முறையில் தொடர்ந்து போராடுவேன் எனவும், உச்சநீதிமன்றத்திலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்