தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனைகளை ஏற்படுத்திய திருச்சி மாநகரம், மற்றுமொரு வரலாற்று நிகழ்விற்குச் சாட்சியாக அமைந்தது. சாதி, மத பேதமற்ற சகோதரத்துவம் தழைக்கவும், போதைப்பொருள் அரக்கனை ஒழிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ள “சமத்துவ நடைபயணத்தை” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 2026-ஆம் ஆண்டின் தனது முதல் பொதுநிகழ்ச்சியாக இதில் பங்கேற்ற முதலமைச்சர், “மது போதையை விட ஆபத்தான மதவாத அரசியல் போதையைத் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பதே நமது இலக்கு” என அனல் பறக்க உரையாற்றினார்.
முன்னதாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து விழா மேடை அமைக்கப்பட்டிருந்த தென்னூர் உழவர் சந்தை திடல் வரை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று கரகாட்டம், செண்டை மேளம் முழங்க முதலமைச்சருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். காலை 10.30 மணியளவில் மேடைக்கு வந்த முதலமைச்சர், வைகோ மற்றும் சீருடை அணிந்த 600 தொண்டர்களின் இந்த நீண்ட நெடும்பயணத்தை வாழ்த்தித் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், “முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் ‘நீதி கேட்டு நெடும்பயணம்’ நடத்தியபோது, அவருக்குப் பாதுகாவலராக நடந்தவர் அண்ணன் வைகோ. இன்று அதே உறுதியோடு சமூக மாற்றத்திற்காக இந்த நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், கடல் வழித் துறைமுகங்கள் வழியாகப் போதைப்பொருட்கள் உள்ளே வருவதைத் தடுக்க ஒன்றிய அரசு தனது எல்லைக் கண்காணிப்பு முகமைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்தல் என்பது பன்னாட்டு நெட்வொர்க் கொண்டது; இதனை ஒழிக்க மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், கலைத்துறையினர் போதைப்பொரூட்களைத் தங்களது படைப்புகளில் “குளோரிஃபை” (விதந்து ஓதுதல்) செய்ய வேண்டாம் என்றும், அது அடுத்த தலைமுறையைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் தற்போதைய சூழல் குறித்துப் பேசுகையில், “ஆன்மிகத்தை வம்பு செய்வதற்காகச் சில கும்பல்கள் பயன்படுத்துகின்றன. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே வெறுப்புப் பேச்சுகளைப் பேசி பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள். சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்ட மக்களும் அச்சத்தில் வாழும் நிலையை மாற்றி, சமத்துவத்தைப் பேணவே இந்த நடைபயணம். திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே” என உறுதிபடத் தெரிவித்தார்.
ஜனவரி 2-ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த “சமத்துவ நடைபயணம்” 10 நாட்கள் தொடர்ந்து ஜனவரி 12-ஆம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 600 இளைஞர் படை வீரர்கள் வைகோவுடன் இணைந்து 2026 தேர்தலுக்கான கருத்தியல் களத்தை இப்போதே தயார் செய்து வருகின்றனர். முதலமைச்சரின் வருகை மற்றும் வைகோவின் இந்த எழுச்சிப் பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் திராவிடக் கூட்டணிக் கட்சிகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.















