பெருந்தன்மையோடு சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் சம்மதித்துள்ளார். இது அவருடைய நேர்மையை காட்டுகிறது.
மடப்புரத்தில் செல்வப் பெருந்தகை பேட்டி.
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், அஜித் குமார் உயிரிழப்பு போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எந்த நிலையிலும்
நடக்கக் கூடாது, காவல்துறை சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.
முதலமைச்சர் தமிழ்நாட்டுடைய வளர்ச்சியிலும், தமிழ்நாட்டு மக்களுடைய முன்னேற்றத்தில் இரவு, பகலும் அயராது உழைத்து வருவதாக தெரிவித்த
செல்வப் பெருந்தகை, இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க புகார் கொடுத்தவரின் பின்புலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அஜித் குமாரின் மீது புகார் கொடுத்த பெண்ணின் மீது ஏராளமான புகார்கள் வருவதாக தெரிவித்த செல்வப் பெருந்தகை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் ஒரு சில காவலர்கள் செய்யும் செயல்கள் அரசுக்கு சங்கடங்களை உண்டாக்குகிறது.
அவதூறு பரப்ப சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என வேதனை தெரிவித்தார். காவல்துறையின் இந்த குற்ற செயலுக்காக தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம் என்றவர், அஜித் குமார் கொலை சம்பவத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையால் அஜித் குமார் கொல்லப்பட்டதால், அஜித் குமார் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கூட நிவாரண தொகை கொடுக்கலாம் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜித் குமாரின் குடும்பத்திற்கு, நிவாரணம் கொடுப்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.