தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளதை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் வயிற்றில் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
தமிழக முழுவதும் கறிக்கோழி விலை உயர்ந்து காணப்படும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு விவசாய தோழமைச் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொய் வழக்கு போட்டு ஈசன் முருகசாமி உட்பட விவசாயிகள் பலரும் காவல்துறையினரால் கைது செய்துள்ளதாகவும் , உடனடியாக அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த விவசாயிகள் பொங்கல் பண்டிகை வருகிறது விவசாயிகளின் வயிறு எரிகிறது என கோஷமிட்டு வயிற்றில் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

















