தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கூட்டணி குறித்த விவாதங்களால் அனல் பறந்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தற்போதைய திமுக ஆட்சியில் விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். டிடிவி.தினகரன் அவர்கள் அதிமுக கூட்டணிக்கு வந்திருப்பதை வரவேற்ற அவர், இதன் மூலம் மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வாக்குகள் சிதறாமல் முழுமையாக அதிமுகவிற்கே வந்து சேரும் என்றும், இதன் பயனாக அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் தனித்து ஆட்சி அமைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தேமுதிக உடனான கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்திற்காகவே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தேமுதிக-வை தொடங்கினார் என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த உண்மையை உணர்ந்துதான் தேமுதிக தலைமை தற்போதைய சூழலில் சரியான முடிவை எடுப்பார்கள் என எண்ணுகிறேன். எனினும் முடிவு எடுப்பது அவர்களது விருப்பம்,” என்று குறிப்பிட்டார். மேலும், அதிமுகவின் பலம் குறித்துப் பேசிய அவர், தங்கள் கூட்டணிக்கு இன்னும் சிலர் வந்தாலும் அவர்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்காகக் கூட்டணிக்காக யாரிடமும் மடிப்பிச்சை ஏந்தும் அளவுக்கு அதிமுக பலவீனமான இயக்கம் அல்ல என்பதையும் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் வல்லமை கொண்டது என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவைப் போலவே திமுகவும் தனது ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு கொடுத்து ஆட்சி அமைக்க விரும்புவதில்லை என்றும், இந்த விஷயத்தில் அதிமுக காட்டிய வழியைத்தான் திமுகவும் பின்பற்றும் என்றும் தெரிவித்தார். தங்களை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே கூட்டணிகளைத் தேடுவதாகவும், அதேசமயம் அதிமுக பலவீனமானது அல்ல என்பதைத் தங்களுடன் கூட்டணி வைக்க வரும் கட்சிகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய எழுச்சியைச் சந்திக்கும் என்றும் ராஜேந்திர பாலாஜி தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
