“59 கிலோ தங்கம்” கனரா வங்கியில் பூஜையை போட்டு ஆட்டைய போட்ட திருடர்கள்

பெங்களூர்: கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின் மனகூலி பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், கடந்த மே 25ம் தேதி இரவு, போலீசாரையும் பொதுமக்களையும் அதிரவைக்கும் வகையில் வங்கி கொள்ளை நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்திற்கு முந்தைய முறையைவிட வித்தியாசமாக, கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்ததை தொடர்ந்து, வங்கிக்குள் நுழைந்து, ரூ.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.5.20 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

இரவு காவலர் இல்லாத வங்கி

வங்கி வளாகத்தில் இரவு காவலாளி இல்லாததை முன்னிட்டு, கொள்ளை கும்பல் மிகத் திட்டமிட்டு செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் வங்கி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

மாந்திரீக பூஜை மூலம் பாதுகாப்பா?

விசித்திரமாக, வங்கிக்குள் புகுவதற்கு முன், வங்கி வளாகத்திலேயே கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்தனர் என்பதும், பின்னர் இரும்பு பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 58 கிலோ தங்க நகைகளையும் ரொக்கத் தொகையையும் எடுத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி ஆதாரமும் கொள்ளை

வங்கியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவின் DVR ஹார்ட் டிஸ்க் மற்றும் கேமரா இணைப்புகளையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், கொள்ளை சம்பவம் நேரில் பதிவாக முடியாமல் போனது.

போலீசார் விசாரணையில்

சம்பவத்துக்குப் பிறகு மனகூலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விஜயப்புரா மாவட்ட எஸ்.பி. லட்சுமண் நிம்பரகி நேரில் சென்று ஆய்வு செய்தார். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பை கணக்கிட்டு, போலீசாரிடம் அறிவித்துள்ளனர்.

8 தனிப்படைகள் அமைப்பு

விசாரணையின் போது, இந்த கொள்ளையில் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காணும் பணிக்காக 8 தனிப்படை போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கி அருகில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

“மாந்திரீக பூஜை செய்த பின்னரே கொள்ளை நடைபெற்றிருக்கிறது. DVR மற்றும் முக்கிய ஆதாரங்களை நுட்பமாகத் தூக்கியுள்ளார்கள். ஆனால், அவர்களை விரைவில் கைது செய்ய நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்” என எஸ்.பி. லட்சுமண் நிம்பரகி உறுதியுடன் கூறினார்.

இந்த திகில் கொள்ளை சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version