ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

ஆவடி : மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற போது தவறி கீழே விழுந்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஆவடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் – எமிலியம்மாள் தம்பதியரின் மகனான கார்த்திக் (வயது 10), ஆவடியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, தாயுடன் பிரார்த்தனைக்காக அருகிலுள்ள வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது, அந்த வீட்டு இரண்டாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த கார்த்திக், மரத்தில் சிக்கியிருந்த ஒரு காற்றாடியை எடுக்க முயன்றுள்ளார். அந்தச் சமயத்தில் திடீரென கீழே தவறி விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பலத்த காயங்களால் சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்திக் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version