தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக, பாமக (அன்புமணி அணி), தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் காணத் தயாராகி வரும் நிலையில், கூட்டணியில் தொகுதிகளைப் பங்கிடுவதில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது.
சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக தரப்பில் 56 தொகுதிகள் மற்றும் எதிர்காலத்தில் அமையும் ஆட்சியில் பங்கு என ‘கறாரான’ கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதிமுக தரப்பிலோ 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளைத் தர முடியாது என்றும், ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுக்கான தொகுதிகள் குறித்துப் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், பிரதமர் மோடியின் வருகைக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் சூசகமாகத் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, பாமகவுக்கான தொகுதிகள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவுக்கான இறுதித் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் விரைவில் தமிழகம் வரவுள்ளார். இக்கூட்டணியின் பலத்தைக் காட்டும் விதமாக, வரும் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள ‘அம்மா திடலில்’ நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
மதுரையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டம் தென் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசுக்கு எதிரான அரசியல் வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், வேட்பாளர் தேர்விலிருந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை வரை தமிழக தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
