இந்தூர் : உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் பெண்களை குறித்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,
“மேற்கத்திய நாடுகளில் ஒரு பழமொழி உள்ளது. ‘சிறு ஆடை அணிந்த பெண்கள் அழகாக இருப்பது போல, தலைவர்கள் சிறு உரையாற்றினால்தான் அழகு’ என்கிறார்கள். ஆனால் இது ஏற்கத்தக்கது அல்ல.
வெளிநாடுகளில் பெண்கள் குறைவான ஆடைகளை அணிவதை சாதாரணமாகக் கருதுகிறார்கள். தற்போது நம் நாட்டின் பெண்களும் அதே சிந்தனையுடன் இருக்கின்றனர்.
இந்தியாவில் பெண்கள் தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் நல்ல ஆடைகள், அழகான ஒப்பனை, நகைகள் அணிந்தால் மட்டுமே உண்மையான அழகு என்பதாய் தோன்றும்.
சில பெண்கள் என்னுடன் செல்ஃபி எடுக்க வரும்போது, நல்ல ஆடைகள் அணிந்திருந்தால் தான் நான் திருப்தியடைவேன். குறைவான ஆடைகளை அணிந்த பெண்கள் எனக்கு பிடிக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு, பெண்களின் உரிமைகளையும், அவர்களின் உடை தேர்வுகளையும் விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி பலர் சமூக வலைதளங்களில் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகள் பாஜக தலைவர்களுக்கு புதிதல்ல என்பதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த காலத்திலும் பல தடவைகள் பாஜகவின் தலைவர்கள் தங்களின் விமர்சனத்திற்குரிய கருத்துகளால் செய்திகளின் மையமாக மாறியுள்ளனர்.
கேரளாவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதற்குக் காரணம் “பசுவதை” என்றும், கேரளா ஒரு “மினி பாகிஸ்தான்” என்றும், அங்கு வாக்களித்தவர்கள் “பயங்கரவாதிகள்” என தெரிவித்த பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா மற்றும் அமைச்சர் நிதேஷ் ரானே ஆகியோரின் பழைய சர்ச்சைப் பேச்சுகளும் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன.
பாஜக அமைச்சரின் சமீபத்திய இந்த பேச்சு, சமூகத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து மீண்டும் ஒரு பரபரப்பான விவாதத்தை தூண்டியுள்ளது.