திருத்தணி அருகே முட்புதரில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை கைவிடப்பட்ட அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை அருகே, புதன்கிழமை காலை, முட்புதரில் அழுகை சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் ஒருசிலர் சந்தேகத்துடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர்.

பின்னர் அவர்கள் பார்த்த போது, புதரில், தொப்புள் கொடியுடன் பிறந்தபடி இருந்த ஒரு பச்சிளம் பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை பிறந்து ஒருசில மணி நேரங்களே ஆன நிலையில் இருந்தது.

உடனடியாக அந்தக் குழந்தையை பொதுமக்கள் மீட்டு, அருகிலுள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழந்தையை 10 மாதங்கள் சுமந்து பெற்ற தாயே, குழந்தையை தொப்புள் கொடியுடன் வனப்பகுதியில் விட்டுச் சென்றிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான சூழ்நிலையிலும் குழந்தையை உரிய நேரத்தில் மீட்ட பொதுமக்களின் செயலுக்கு சமூக வட்டாரங்களில் பாராட்டு கிளம்பியுள்ளது.

Exit mobile version