ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் இன்று தொடக்கம் : இந்தியாவின் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் ISS-க்கு புறப்படும்

ஹூஸ்டன் : ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ISS) இன்று புறப்பட உள்ளனர். பலமுறை தள்ளிப்போயிருந்த இந்த பயணம், தற்போது இறுதியாக இன்று (ஜூன் 25) நடைபெறவிருக்கிறது.

இந்த பயணக்குழுவில், இந்தியாவின் சுபன்ஷு சுக்லா, போலந்தின் ஸ்லாவோச் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு, அமெரிக்காவின் பெக்கி விட்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பயணத்தை குறித்து பேசிய சுபன்ஷு சுக்லா, “நான் ISS-ல் 14 நாட்கள் செலவிடப் போகிறேன். என் கூட கருவிகளும் உபகரணங்களும் மட்டுமல்ல, ஒரு பில்லியன் இதயங்களின் நம்பிக்கையும் கனவுகளும் இருக்கின்றன. இது ஒரு கனவுப் பயணம். எங்கு தொடங்கியது எனக்குத் தெரியாது. எங்கு முடியும் என்பதும் தெரியவில்லை. ஆனால், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது ஒரு பெரிய அதிர்ஷ்டம்” என்றார்.

சுபன்ஷு சுக்லா, 1984-இல் விண்வெளிக்குச் சென்ற இந்தியாவின் முதல் வீரரான விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவின் பின், விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது மனிதராக வரலாற்றில் இடம்பிடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version