காஸா நிவாரண முகாம்களில் தாக்குதல் – ரொட்டிக்காக வந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 56 பேர் உயிரிழப்பு

காஸா :
பசிக்காக நிவாரண முகாம்களில் காத்திருந்த பொதுமக்கள்மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவின் ரஃபா பகுதியில் மட்டும் 27 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உணவு, உடை போன்ற அத்தியாவசியங்கள் கிடைக்கவே முகாமை நோக்கிச் சென்றவர்களாக இருந்துள்ளனர். இதற்காக ஆயுதம் இல்லாத பொதுமக்கள் நிவாரண முகாம்களை நோக்கிச் செல்லும் போதே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீப நாட்களில் மட்டும் காஸாவில் நிவாரண முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துவிட்டதாக மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஒரு கைப்பிடி சோறு கூட எளிதில் கிடைக்காத சூழலில், தினமும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களுக்கு ஓடி வருகின்றனர். அவர்களில் பலர் அந்த முகாம்களுக்கு சென்று திரும்பவே முடியாத நிலையிலேயே உயிரிழக்கின்றனர்.

அந்நிலையை விளக்குகின்ற ஒருவர் – அப்தல்லாஹ் அல் நஜார் – “இந்த உணவில் ரத்தத்தின் சுவை உள்ளது” என வேதனையுடன் கூறுகிறார். அவரது கைகளில் காயம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“நாங்க நிவாரணத்துக்கு தான் வர்றோம். ஆயுதமோ கைத்துப்பாக்கியோ எதுவும் இல்ல. ஆனா நாங்க தான் டார்கெட்டா மாறுறோம். ஒரு ரொட்டிக்காக உயிர் தியாகம் செய்ய வேண்டியதா?” எனக் கேட்கிறார் முன்சிர் செய்ஃப் என்ற மூதாட்டி.

இஸ்ரேல் தரப்பின் விளக்கம்:
ராணுவ முகாமை நோக்கி வந்தவர்கள் மீது பாதுகாப்புக்காகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட மக்கள் “நாங்கள் வெறும் சாப்பாட்டிற்காக தான் வந்தோம்” என தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.

போர் நிலையில் நிவாரண முகாம்களும் பாதுகாப்பற்றவை எனும் உண்மை மேலும் ஒருமுறை இந்த தாக்குதல் மூலம் வெளிவந்துள்ளது.

Exit mobile version