இந்தியாவின் முன்னணி கனரக வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்ட் நிறுவனம், 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முதன்மை ஸ்பான்சராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா தெரிவிக்கையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே வீரர்களின் புகழ்பெற்ற மஞ்சள் நிற ஜெர்சியின் முன்பக்கம், வலதுபுற மார்புப் பகுதியில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் லோகோ பிரத்யேகமாக இடம்பெறும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஏற்கனவே இந்துஜா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான கல்ஃப் ஆயில், சிஎஸ்கே அணியுடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான கூட்டணியைத் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்துஜா குழுமத்திற்கு இடையிலான நீண்ட கால நெருங்கிய உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அசோக் லேலண்ட் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் விழாவில், நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா மற்றும் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஷெனு அகர்வால் ஆகியோர் இந்தக் கூட்டணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். இந்த விழாவின் சிறப்பம்சமாக, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வின் போது அசோக் லேலண்ட் லோகோ பொறிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் புதிய அதிகாரப்பூர்வ ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டதோடு, சிஎஸ்கே-வின் தீவிரமான ‘விசில் போடு’ ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன ‘சிஎஸ்கே ரசிகர் பேருந்தையும்’ அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகம் செய்து அசத்தியது.
இந்தக் கூட்டணி குறித்து சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில், அசோக் லேலண்ட் நிறுவனத்தை ஸ்பான்சராக வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஷெனு அகர்வால், இந்த முயற்சி என்பது வெறும் ஜெர்சியில் லோகோவை இடம்பெறச் செய்வது மட்டுமல்ல, இது சாம்பியன்களின் பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதும், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மதிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைவதும் ஆகும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தமிழகத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் இந்த இரண்டு ஜாம்பவான்கள் ஒன்றிணைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













