நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இந்தகோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சைவக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும்.
காசியில் பாதி காழி என்பது பழமொழி, காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ காசியை தரிசித்த புண்ணியம் இங்கு கிடைக்கும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம்
பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது சீர்காழியிலேயே மிக முக்கியமான ஆலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் தனது தேவியான திருநிலைநாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் புரிகிறார். பிற இரண்டு வடிவங்கள், சட்டைநாதர் மற்றும் தோணியப்பர் ஆகும். இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமனது பிரம்ம தீர்த்தம் ஆகும். நான்கு புறங்களிலும் நான்கு பெரிய கோபுரங்கள் சூழ பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது இக்கோவில்.

18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோவில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது, இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டை நாதரை தரிசிக்க முடியும்.
வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சார்த்தி, வடை மாலை அணிவித்து பாசி பருப்பு பாயசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
அஷ்ட பைரவர்களும் ஓரே இடத்தில் இருக்கும் சிறப்பு இத்தலத்தில் உள்ளது. இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீ~;ண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.

எனவேதான் காசியில் பாதி காழி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.
உரோமச முனிவர் கயிலை சென்று சிவனை நோக்கி தவம் செய்து இறைவா பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்என வேண்டினார்.
ஒரு சமயம் ஆதிஷேனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. இதில் ஆதிஷேன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக் கொண்டார். வாயுவால் மலையை அசைக்கக் கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின்படி ஆதிஷேன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் ஒரு சிறு பகுதி பெயர்ந்தது. இறைவன் அருளால் அந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்ந்தன.

காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால்தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அந்த மன்னன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றான்.
இக்கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக் கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜைகள் நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்கச் செய்தார்.

இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தலத்து இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
நடு அடுக்கில் உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர் என அழைக்கின்றனர். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்த குன்றையும் தோணிமலை எங்கின்றனர்.
புராணங்களின்படி, பிரம்மதேவனுக்கு தான் என்னும் அகந்தை ஏற்பட்டதாம். அதனால், மஹாபலி சக்கரவர்த்தியை நரகத்திற்கு அனுப்பிவிட்டாராம். இதன் காரணமாக தகாத விளைவுகள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதமாக சிவபெருமான் வேடன் உருவத்தில் வந்து பிரம்மதேவனின் அகந்தையை அழித்து, தனது தவறை உணர்ந்துகொள்ளச் செய்தாராம். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தது இத்தலத்தில்தான் என்பதால், இத்தலத்திற்கு, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்தில அருளிபாளிக்கும் இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் வேணுபுரம் என்றும், சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் என்றும், குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் வெங்குரு.நாதர் என்றும், ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீர்காழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் தோணிபுரம் என்றும் போற்றப்படுகிறது.
பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்ற வராக மூர்த்தி வழிபட்டதால் – பூந்தராய் என்றும், தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் சிரபுரம் என்றும், புறா வடிவில் வந்த அக்கினியால் சோழ மன்னன் நற்கதியடைந்தமையால் புறவம் என்றும்,
சண்பைப் புல்லால் மாய்ந்த தம்குலத்தோரால் வந்தபழி தன்னைப் பற்றாதிருக்க, கண்ணபிரான் வழிபட்டதால் சண்பை என்றும், தில்லைப் பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால் ஸ்ரீகாளி என்றும் பெயர் பெற்று பிறகு மறுவி சீர்காழி என்று பெயர் பெற்றது.’

மச்சகந்தியைக் கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால் கொச்சை வயம்.என்றும், உரோமச முனிவர் இத்தலம் அடைந்து பூசித்ததால் ஞானோபதேசம் பெற்று உலகில் உயிர்களது மலங்கழுவும் வரம் பெற்றதனால் கழுமல வள நகர் என பெயர் பெற்றது.
கோவில் ஊர் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அழகுற விளங்குகிறது. கணநாத நாயனார் தொண்டுசெய்து வாழ்ந்த தலம். இத்திருக்கோவிலின் இறைவன் பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர். இறைவி பெரியநாயகி, திருநிலைநாயகி. தலமரம் பாரிசாதம். தீர்த்தம் பிரம தீர்த்தம் முதலாகவுள்ள 22 தீர்த்தங்கள்.
பிரமதீர்த்தமே பிறவற்றினும் மேலானது. இக்கரையில்தான் ஞானசம்பந்தர், ஞானப்பாலையுண்டார். திருமுலைப்பால் உற்சவம் இன்றும் சித்திரைப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகின்றது.
திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார் என்பது இப்பகுதியில் சொல்லப்படும் மொழியாகும்.
இறைவன் திருமேனிகளுள் அடிப்பாகத்திலுள்ள பிரமபுரீஸ்வரர் பிரமன் பூசித்தது இலிங்கவடிவம். இடைப்பகுதியிலுள்ள தோணியப்பர் குரு வடிவம். சட்டை நாதர் சங்கமவடிவம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

மாவலியிடம் சென்று மண்கேட்டுப் பெற்ற மகாவி~;ணு, செருக்குற்றுத்திரிய, வடுகநாதர் சென்று தம் திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பிலடித்து வீழ்த்தினார். இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கினார்.
தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளமாறு அவர் வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்.
தோடுடைய செவியன் என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் இந்த சீர்காழியில் தான் பாடினார்.
உலக நாயகி பார்வதி அம்மையிடம் திருமுலைப்பால் அருந்திய திருஞானசம்பந்தரின் அவதாரத் திருத்தலம். அவர் ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம்.
சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர் – பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.
குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்
சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர் சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு யார் தந்த எச்சில் பாலை உண்டாய் சொல் எனக் கேட்டு சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.
அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, தோடுடைய செவியன் விடையேறி என்று பதிகம் பாடலானார். ஆம் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.
பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.
திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.
முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிஷேன், ராகு, கேது, வியாசர் முதலியோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.
இக்கோவிலில் 47 கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன.
இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளக்குவதாக உள்ளன.
இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம் என்ற நீண்ட பெயரில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கும். வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் பல இவன்றிம்மூலம் அறியவருகிறது.
இந்த ஆலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு உமை அன்னை ஞானப்பால் ஊட்டிய பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும்.
சித்திரை திருவாதிரையில் பிரம்மோத்ஸவம் தொடங்கும். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். மலைக் கோவிலில் அருள்பாலிக்கும் உமா மகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி. தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.
சீர்காழி சட்டநாதர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனை தரிசித்தால் காசிக்கு சென்ற புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம்