கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : உதயநிதி ஸ்டாலின் சொன்ன அப்டேட்..

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விடுபட்ட அனைத்து பெண்களுக்கும் நிச்சயமாக உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடுமையான பொருளாதாரச் சவால்களுக்கிடையிலும், எந்த தகுதியான பெண்ணும் விலக்கப்படமாட்டார் என அவர் உறுதி அளித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 28 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்காக வருவாய் துறை அதிகாரிகள் தற்போது கள ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, நவம்பர் மாதம் வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும். அத்துடன் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.73 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் பலனை பெற்றுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது, “முகாம்களில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். அடுத்த ஒரு இரு மாதங்களில் அவர்களுக்கு நிச்சயமாக பணம் வழங்கப்படும்” என்றார்.

புதிய விண்ணப்பங்கள் – இறுதிக்கட்ட ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கான கள ஆய்வு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்து வருகிறது. நவம்பர் 14க்குள் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன் பின் நவம்பர் இறுதியில் பயனாளிகளுக்கு உறுதிப்படுத்தும் மெசேஜ்கள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

டிசம்பரிலிருந்து புதிய பயனாளிகளுக்கு தொகை வழங்கல்
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தகுதியான புதிய பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதாந்திர ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதுவரை கடந்த 26 மாதங்களில் சுமார் 1.14 கோடி பெண்கள் மாதந்தோறும் ₹1,000 பெற்றுள்ளனர். இதற்காக மொத்தம் ₹30,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், பல பெண்கள் இத்திட்டத்தின் பலனைப் பெறும் வகையில் சில தகுதிநிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசு சேவைகளை மக்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் ஜூன் 19, 2025 அன்று தொடங்கப்பட்டன. நவம்பர் 15ஆம் தேதிக்குள் 10,000 முகாம்கள் நடத்தும் இலக்கில் இதுவரை 9,055 முகாம்கள் முடிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தெரிவித்தார்.

Exit mobile version