திண்டுக்கல் மாவட்ட மையத்தில் அமைந்துள்ள காமராஜர் பேருந்து நிலையம், பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களான பாலக்காடு, திருப்பதி போன்ற இடங்களுக்கும் பயணிகளை இணைக்கும் முக்கியமான நிலையமாகும்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 20) மாலை பழனி பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே, தனியார் பள்ளியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் உருவாகி, அது கைதாக்கு சண்டையாக மாறியது.
சம்பவ இடத்தில் அருகிலிருந்த கடையின் பாத்திரங்களை எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் பரபரப்படைந்து அச்சமடைந்தனர்.
சண்டையை தடுக்க கடைக்காரர்கள் முயற்சி எடுத்த நிலையில், மாணவர்கள் அந்த இடத்தை விட்டு விரைந்து புறப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர்.
சம்பவம் நடைபெறும்போது பேருந்து நிலையத்துக்கு சொந்தமான புறக்காவல் போலீஸ் நிலையத்தில் எந்தவொரு காவலரும் இல்லாதது, பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.