நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் டாக்டர் வி. சரோஜா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி. தங்கமணி, வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கத் தொண்டர்கள் இப்போதே போர்க்களப் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருவதாகவும், சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி மற்றும் மின்கட்டண உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பெருகிவிட்டதாகவும் அவர் சாடினார். “தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் மக்களுக்காகவே இயங்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே; இந்த உண்மையை ஒவ்வொரு தொண்டனும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற திமுக நாடகமாடி வருவதாகவும், மத்திய அரசுடன் தேவையற்ற மோதல்களில் ஈடுபட்டுத் தமிழகத்திற்கு வரவேண்டிய முக்கியத் திட்டங்களைத் திமுக அரசு தடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வரும் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே நமது ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தும் நோக்கில், ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகரம் என வாக்குச்சாவடி வாரியாக அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை பி. தங்கமணி வெளியிட்டார். வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, இரட்டை இலைச் சின்னமும் எடப்பாடியாரின் தலைமையுமே முக்கியம் என்று அவர் பேசினார். முன்னதாக ராசிபுரம் ஒன்றியம் மற்றும் ஆர்.பட்டணம் பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. கே. கலாவதி, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி. கந்தசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கே.பி. சுரேஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஏ.வி.பி. முரளிபாலுசாமி மற்றும் நிர்வாகிகள் எஸ். வெங்கடாஜலம், டி. தமிழ்செல்வன், ஆர்.பி. சீனிவாசன், ராதாசந்திரசேகரன், வழக்கறிஞர் பூபதி உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
