அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் “உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,
முறைகேடு தொடர்பாக வரி விதிப்பு குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார், காவல்துறை விசாரணையில் கைது செய்யப்பட்ட கண்ணன் வரிவிதிப்பு முறைகேட்டில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், வரி முறைகேடு தொடர்பாக ஊடகத்திற்கு பேட்டி அளித்த மேயர் இந்திராணி பெரிய அளவில் ஊழல் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார், ஆகவே, மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு வேறு திசைக்கு சென்று கொண்டிருப்பதால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர், மாநகராட்சி வரி ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும், அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சிகளின் வரி உயர்த்தப்படவில்லை.
அதனால் எந்த ஒரு முறைகளும் நடைபெறவில்லை, திமுக ஆட்சி காலத்தில் 150 சதவீதமாக வரிகள் உயர்த்தப்பட்டதால் அவ்வரிகளை குறைப்பதற்காக மக்கள் இவ்வாறான வழிகளை தேடுகிறார்கள், நீதிமன்றம் அமைத்த குழு மாநகராட்சி வரி ஊழலை முழுமையாக விசாரிக்கும் என நம்புகிறோம்” என கூறினார்.