திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 26-ம் தேதி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், முருகப் பெருமானைத் தரிசிக்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். நேற்று அதிகாலை 2 மணி முதலே மலைக்கோயிலுக்குச் செல்லும் வரிசையில் பக்தர்கள் காத்துக்கிடந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வரத்து கடல் அலை என அதிகரித்தது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் திணறும் சூழல் ஏற்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. அதன்படி, மலைக்குச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், சுவாமி தரிசனம் முடித்து கீழே இறங்கும் பக்தர்கள் வழக்கமான படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் பக்தர்களைப் போலீஸார் அணி அணியாகப் பிரித்து அனுப்பிய போதிலும், இறைவனைச் சீக்கிரம் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் உருவானது. நீண்ட நேரமாகக் கடும் வெயிலிலும், பனியிலும் வரிசையில் காத்திருந்ததாலும், போதிய காற்றோட்டம் இல்லாததாலும் முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்படப் பல பக்தர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.
மயக்கமடைந்து சரிந்த பக்தர்களை மீட்ட பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், மனிதாபிமானத்துடன் அவர்களைத் தங்கள் தோளில் சுமந்தபடி ஓடிச் சென்று மருத்துவ முகாம்களில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சுவாமி தரிசனத்திற்காகப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் போதிய குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைக்காமல் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விழாக்காலங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும், ‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் பொறுமை காத்து முருகனைத் தரிசித்துச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.














