கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆன்மீகப் பெருமையான 12 சிவாலய ஓட்ட தரிசனத்தில், இரண்டாவது சிவாலயமாகவும் ரிஷப ராசி பரிகாரத் தலமாகவும் விளங்கும் திக்குறிச்சி மஹா தேவர் திருக்கோயில் நிர்வாகப் புறக்கணிப்பால் தவித்து வருகிறது. மஹா சிவராத்திரி நெருங்கி வரும் வேளையில், திக்குறிச்சி நுழைவு வாயிலில் இருந்து கோயில் செல்லும் சாலை கடந்த 18 ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியும், திக்குறிச்சி பாலத்தில் மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்தும், விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் சிவ பக்தர்கள் இன்று மிக நூதனமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். பாகோடு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கும் விதமாக, 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டபோது வைக்கப்பட்ட கல்வெட்டிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பக்தர்கள், சாலையின் அவலநிலைக்காகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் மேல்புறம் ஒன்றியத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று கோசாலையில் உள்ள பசு மாட்டிற்கும், புனிதத் தாமிரபரணி நதிக்கும் மனு கொடுத்து முறையிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால், தெய்வத்தின் அடையாளமாக விளங்கும் பசுவிடமும் நதியிடமும் முறையிடுவதாகப் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பக்கச்சுவர் கட்ட 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டும், இன்றுவரை பணிகள் தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. லேட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் சிவராத்திரி ஓட்டத்திற்கு முன்பு இந்தப் பணிகளை முடிக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கண்டனப் போராட்டத்தில் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றியப் பொறுப்பாளர் பிபின், மற்றும் பஞ்சாயத்துப் பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும், பாஜக மேல்புறம் ஒன்றியத் துணைத் தலைவர் ஐயப்பன் உட்பட விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் பங்கேற்றுத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். சிவராத்திரிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திக்குறிச்சி பாலத்தில் மின்விளக்குகளை எரியச் செய்யவும், சாலையைச் சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
