வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

பிரபஞ்சத்தின் அரிய நிகழ்வுகளில் ஒன்றான ‘ரத்த நிலா’ (Blood Moon) எனப்படும் இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் இந்த அபூர்வ நிகழ்வின் போது, பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைப்பதால் நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும். இந்த வானியல் அதிசயத்தை ரசிக்க உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு முறைப்படி தொடங்கியது. சந்திரன் படிப்படியாக பூமியின் நிழலுக்குள் நுழையத் தொடங்கி, மாலை 4:34 மணி அளவில் முழுமையாக மறைக்கப்படும். மாலை 4:34 மணி முதல் 5:33 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் சந்திரன் பூமியின் அடர் நிழலால் (Umbra) மூடப்பட்டு, சூரிய ஒளி சிதறடிக்கப்படுவதால் ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும். பின்னர் மாலை 5:33 மணிக்கு மேல் கிரகணம் படிப்படியாக விலகத் தொடங்கி, மாலை 6:48 மணிக்கு முழுமையாக நிறைவடையும். மொத்தம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் இந்த கிரகணம் நீடிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கிரகணம் தொடங்கும் போது பகல் பொழுதாக இருப்பதால், சூரியன் மறைந்த பிறகு நிலவு உதிக்கும் நேரத்திலேயே இந்த மாற்றங்களை மக்கள் காண முடியும். குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த முழு சந்திர கிரகணக் காட்சி மிகத் தெளிவாகத் தெரியும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் மாலை 6:17 மணி முதல் 6:48 மணி வரை சுமார் 31 நிமிடங்கள் கிரகணத்தின் இறுதிப் பகுதியைத் தரிசிக்கலாம். அதேபோல் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளிலும் இதே கால அளவில் கிரகணத்தைக் காண வாய்ப்புள்ளது.

வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு முக்கியச் செய்தியாக, சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை எவ்விதத் தடையுமின்றி வெறும் கண்களாலேயே பாதுகாப்பாகப் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுதி செய்துள்ளது. டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் மூலம் பார்த்தால் நிலவின் நிற மாற்றத்தை இன்னும் துல்லியமாக ரசிக்க முடியும். மேகமூட்டம் இல்லாத பட்சத்தில் இன்று மாலை தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை ஓரங்களில் இந்த ‘ரத்த நிலா’ கண்கொள்ளாக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version