திருநெல்வேலி : தி.மு.க. அரசை வீழ்த்த அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டுமென்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வெள்ளி தேர் திருப்பணிக்காக, ஒரு கிலோ வெள்ளியை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்லையாவிடம் ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், பல முக்கிய கருத்துகளை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது :
“ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு பா.ஜ.க காரணமல்ல. அவர்கள் இருவரும் இணைந்து பா.ஜ.க கூட்டணியில் தொடர வேண்டும்.
அனைத்து கட்சிகளும் தி.மு.க.வை வீழ்த்த பாகுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும். தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், கூட்டணியை நம்பியே களத்தில் உள்ளார். ஆனால், அவரது வாக்குறுதிகளில் பெரும்பாலான திட்டங்கள் இன்னும் நிறைவேறவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளன.”
தொடர்ந்து, நாடு முழுவதும் புதிய திட்டங்கள் வருகின்ற போதிலும், ஆதார் அட்டை, தங்க நகை அடமான விதிகள் போன்றவை ஆரம்பத்தில் எதிர்ப்பை சந்தித்தாலும், தற்போது சீராக செயல்படுவதை குறிப்பிட்டார்.
என்.ஆர்.சி. விவகாரம் குறித்து,
“இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாது, மேற்குவங்கம் வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது,” என்றும் விளக்கினார்.