அகமதாபாத் :
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து பயங்கரமான விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் மதியம் 1.38 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட 10 நிமிடங்களில், அகமதாபாத் அருகே உள்ள குடியிருப்பு பகுதியின் மேல் விபத்துக்குள்ளானதால் தீப்பற்றிக் கரும்புகை எழுந்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இந்த பேரழிவில், விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர்த்து, மற்ற 241 பேரும் உயிரிழந்தனர் என்பதே மைய தகவலாகும்.
இதையடுத்து, அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்ட பூமி சவுகான் என்ற பெண் ஒருவர், இந்நிகழ்வில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
லண்டனில் கணவருடன் வசித்து வரும் பூமி சவுகான், விடுமுறை கொண்டாட இந்தியா வந்திருந்தார். மீண்டும் லண்டனுக்கு திரும்பும் திட்டத்துடன், அந்த விமானத்திலேயே செல்ல வேண்டியிருந்தார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையம் அடைய தாமதமானதால், அவர் அந்த விமானத்தை தவற விட்டார்.
இந்த நிலையில் விமான விபத்து நிகழ்ந்ததற்குப் பிறகு, அதிர்ச்சியில் உறைந்த பூமி சவுகான் கூறுகையில்,
“நான் முற்றிலும் உருக்குலைந்துவிட்டேன். என்னால் பேசக்கூட முடியவில்லை. அந்த விபத்தை நினைத்தாலே நடுக்கம் வருகிறது. என் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை.” என்று கூறினார்.