38 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கல்யாணம் இளையாத்தங்குடியில் கோலாகலத் தேரோட்டம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம், இளையாத்தங்குடியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் கோயிலில், ஆருத்ரா தரிசனப் பெருவிழாவை முன்னிட்டுச் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. நகரத்தார் ஒன்பது கோயில்களில் முதன்மையான இக்கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி மாணிக்கவாசகப் பெருமானுக்குக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, எட்டாம் திருநாளன்று சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் ஆகம விதிகளின்படி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பல தசாப்தங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் திருக்கல்யாணத்தைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ஒன்பதாம் நாள் காலையில் மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்வும், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் பக்தர்களுக்கு அருள்பாலித்தன.

விழாவின் பத்தாம் நாளான நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கே நடை திறக்கப்பட்டு நடராஜர் மற்றும் மாணிக்கவாசகருக்குப் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நடராஜப் பெருமானுக்குக் காலை 8:50 மணிக்கு ஆருத்ரா தரிசன மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி” என முழக்கமிட்டுச் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க நடராஜப் பெருமான் கோயிலில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அதேபோல் சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினர். காலை 10:35 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகள் வழியாகத் தேர் ஆடி அசைந்து வந்தது. சப்பரத்தில் அம்பாளும் மாணிக்கவாசகரும் பின்னால் வலம் வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இளையாத்தங்குடி கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் திருப்புத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

Exit mobile version