ஈரோடு : “பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது,” என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அந்தவிழாவில் அவர் கூறியதாவது:
“இந்தியாவின் மஞ்சள் மாநகரம் என அழைக்கப்படும் ஈரோடு, தமிழக வேளாண் வளர்ச்சியில் 8வது இடத்தில் உள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாகவே வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் உணவுத்தானிய உற்பத்தி 458 லட்சம் மெட்ரிக் டனை எட்டியுள்ளது.
விவசாயிகளால் தான் மக்கள் உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ எனத் துறையின் பெயரையே மாற்றினோம். இது விவசாயிகளுக்கு நாங்கள் தரும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல. விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால், அதை முதலில் நானே எதிர்கொள்வேன். விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும், பயிர்களுக்கு இடையே களைகள் எப்படி முளைக்கின்றன என்பதை. அப்படிப்பட்ட களையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.
அந்த ஆட்சியில் விவசாயிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்தன. ஆனால் இன்றைய நிலையில், அந்த நிலைமை மாறியுள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமையும். விவசாயிகளை காக்கும் இந்த அரசுக்கு, உங்கள் துணை கட்டாயம் தேவை” என்று அவர் வலியுறுத்தினார்.